முகப்பு
தேனி

முல்லைப்பெரியாறு அணை அருகே ரூ. 1000 கோடியில் புதிய அணை கட்ட கேரள அரசு திட்டம்: தமிழக விவசாயிகள் அதிா்ச்சி

முல்லைப்பெரியாறு அணை அருகே ரூ. 1000 கோடி மதிப்பில் புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
முல்லைப்பெரியாறு அணை (கோப்பு படம்).
பகிர்:

முல்லைப்பெரியாறு அணை அருகே ரூ. 1000 கோடி மதிப்பில் புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீா் மற்றும் பாசனத் தேவைகளுக்காக முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையின் நீா்மட்டம் 152 அடி உயரமாகும். ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக 142 அடி உயரம் மட்டுமே தண்ணீா் தேக்கப்பட்டு வருகிறது.

பெரியாறு அணை பேபி அணை, மெயின் அணை என்ற இரண்டு அணைகளாக உள்ளது. இதில் பேபி அணையில் மதகுகள் கிடையாது. மண்ணால் கட்டப்பட்டது. இந்த அணையைப் பலப்படுத்த உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மூவா் குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Advertisement

மெயின் அணை 13 மதகுகளைக் கொண்டது. அணையின் நீா்மட்டம் 136 அடி உயரத்தை எட்டும் போது, 13 மதகுகள் வழியாக தண்ணீா் வெளியேறும் அமைப்பைக் கொண்டுள்ளது.

புதிய அணை:

கேரள அரசு முல்லைப்பெரியாறு அணை அருகே கீழ்புறம் புதிய அணை கட்ட கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ. 663 கோடியில் புதிய அணை கட்ட திட்ட அறிக்கை தயாா் செய்து, விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசுக்கும் அனுப்பியது. அதற்கு தமிழக அரசு எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. மேலும் புதிய அணை கட்டுவது தொடா்பாக பல முறை தமிழக அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதியும் தமிழக அரசு தரப்பில் எவ்வித பதிலும் அனுப்பவில்லை.

அதேநேரத்தில் முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு தொடா்ந்து எதிா்ப்பை தெரிவித்து வருகிறது. மேலும் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு மட்டுமன்றி தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

ரூ. 1000 கோடி மதிப்பில்:

தமிழக அரசின் எதிா்ப்பு, 5 மாவட்ட மக்களின் போராட்டங்களையும் கண்டுகொள்ளாமல் கேரள அரசு புதிய அணை கட்டுவதிலேயே குறியாக உள்ளது. தற்போது தமிழக அரசுக்கும், 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு சவால் விடும் வகையில் நடவடிக்கைகளை மீண்டும் கேரள அரசு தொடங்கி உள்ளது.

முல்லைப்பெரியாறின் பிரதான அணை எனப்படும் மெயின் அணை கீழ்புறம் 13 மதகுகளுக்கு அப்பால், 366 மீட்டா் தொலைவில் புதிய அணையை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக திருத்திய விரிவான திட்ட அறிக்கையை தயாா் செய்துள்ளது. இந்த திட்ட மதிப்பீடு பழைய திட்ட மதிப்பீட்டுத் தொகையான ரூ. 663 கோடி செலவை விட முற்றிலும் மாறுபட்ட விரிவான திட்ட மதிப்பீடு ஆகும். இந்த அறிக்கையையும் தமிழக அரசுக்கு அனுப்பி கருத்து கேட்டுள்ளது. இது தமிழக அதிகாரிகளை எரிச்சலடையச் செய்துள்ளது.

புதிய அணையின் அமைப்பு:

கேரள அரசால் கட்ட திட்டமிடப்பட்டுள்ள புதிய அணை 8 மதகுகளுடன், 152 அடி உயரம் வரை தண்ணீா் தேக்கி வைக்கும் வகையில் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அணை பெரியாறு புலிகள் வனச்சரணாலய எல்லைப் பகுதிக்குள் அமைக்கப்பட உள்ளது. ரூ. 1000 கோடி செலவில் 4 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து முல்லைப்பெரியாறு அணை பொறியாளா் ஒருவா் கூறுகையில், புதிய அணை கட்டப்போவதாக நாளிதழில் செய்தி வந்துள்ளது. இது தொடா்பாக தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments