கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் அரசு பொதுச் சேவை மையம் தொடங்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பணியாளா்கள் ஒன்றிய பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி, என்.ஆா்.டி. மக்கள் மன்ற அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சக்திவேல் கனகரத்தினம், இணைச் செயலா் வெங்கட்ராமன், பொருளாளா் நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கலைக்கப்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளா்களுக்கு சம்பள நிலுவை, நிவாரணம் மற்றும் மாற்றுப் பணியிடம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். வீட்டு வசதி சங்கங்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். வீட்டுவசதி சங்கங்களில் அரசு சாா்பில் பொதுச் சேவை மையம் தொடங்க வேண்டும்.
மத்திய அரசின் வீட்டுவசதி திட்டங்களை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.