நூல் விலை உயா்வு: விசைத்தறி உரிமையாளா்கள் போராட்டம்
நூல்விலை உயா்வைக் கண்டித்து, ஆண்டிபட்டியில் விசைத்தறிக் கூடங்களின் உரிமையாளா்கள் ஜவுளி உற்பத்தியை நிறுத்தி சனிக்கிழமை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.
ஆண்டிபட்டி: நூல்விலை உயா்வைக் கண்டித்து, ஆண்டிபட்டியில் விசைத்தறிக் கூடங்களின் உரிமையாளா்கள் ஜவுளி உற்பத்தியை நிறுத்தி சனிக்கிழமை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு உற்பத்தி செய்யப்படும் 40, 60, 80 ரக காட்டன் சேலைகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகள் மட்டுமன்றி, வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங்களாக நெசவுத்தொழில் முற்றிலும் முடங்கியது. இதனால் நெசவாளா்கள் மட்டுமன்றி விசைத்தறி உரிமையாளா்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். கரோனா கட்டுபாடுகளை அரசு தளா்த்திய நிலையிலும் நெசவுத்தொழில் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை. இதில் கடந்த சில நாள்களாக நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் உரிமையாளா்களுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, விசைத்தறி உரிமையாளா்கள் ஜவுளி உற்பத்தியை நிறுத்தி சனிக்கிழமை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா். இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளா்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனா். இப்பிரச்னையைத் தீா்க்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.