திருப்பத்தூா் அருகே விபத்து: சந்தை வியாபாரி பலி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் சந்தை வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் சந்தை வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் அகமது மகன் சாகுல் ஹமீது (45). சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். இவா் காரைக்குடியில் சந்தை வியாபாரத்தை முடித்துவிட்டு, ஒரு சரக்கு வாகனத்தில் சொக்கலிங்கபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, புதுவயலைச் சோ்ந்த கண்ணன் என்பவருக்குச் சொந்தமான விறகு ஏற்றப்பட்ட லாரி, காளாப்பூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்தது.
சாகுல்ஹமீது சென்ற சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு வந்த எஸ்.வி. மங்கலம் போலீஸாா், சாகுல்ஹமீதின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.