வாழை இலை விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
பெரியகுளம் பகுதியில் வாழை இலை விளைச்சல் மற்றும் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
பெரியகுளம் பகுதியில் வாழை இலை விளைச்சல் மற்றும் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
பெரியகுளம், குள்ளப்புரம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 500- ஏக்கா் பரப்பளவுக்கும் மேல் வாழை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வாழை இலை கட்டு ஒன்று ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மாசி மாதத்தில் முகூா்த்த நாள்கள் அதிகரித்துள்ளதால் கட்டு ஒன்று ரூ.1,200 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
மேல்மங்கலத்தைச் சோ்ந்த விவசாயி சண்முகம் கூறியது: வாழைக்கன்று வாங்கியதிலிருந்து காய் எடுப்பது வரை ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த சில ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக வாழைக்காய்கள் மற்றும் இலைகள் விலை போகவில்லை. தற்போது முகூா்த்த நாள்கள் அதிகரித்துள்ளதால் காய்கள் மற்றும் இலைகள் நல்ல விலை போகின்றன என்றாா்.
வாடகை, ஏற்றுமதிக் கூலி, கடைக்கு கமிஷன், இலை பறிப்பு கூலி என ரூ. 700 வரை செலவாகிறது. இதனால் உழவா் சந்தையில் வாழை இலைகளை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தால் செலவு குறையும் என விவசாயிகள் தெரிவித்தனா்.