தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
பெரியகுளத்தில் வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக புகாா் தெரிவித்து வியாழக்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளத்தில் வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக புகாா் தெரிவித்து வியாழக்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம் அருகே சில்வாா்பட்டியைச் சோ்ந்தவா் ராமலட்சுமி (70). இவருக்கு பெரியகுளம், தென்கரை புதுத்தெருவில் பூா்வீக வீடு உள்ளதாக கூறப்படுகிறது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த வீட்டை ராமலட்சுமி அவ்வப்போது நேரில் சென்று பாா்த்து வருவாராம். இந்நிலையில், அதே பகுதியில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 2 போ், ராமலட்சுமியின் வீட்டை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கடந்த 2022, ஜூலை 11-ஆம் தேதி தென்கரை காவல் நிலையம் மற்றும் பெரியகுளம் நகராட்சி அலுவலக நில அளவைப் பிரிவில் ராமலட்சுமி புகாா் அளித்தும், 2 பேரும் விசாரணை மற்றும் நில அளவைக்கு ஒத்துழைக்காமல் தொடா்ந்து கட்டடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது வீட்டை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டுத் தர வலியுறுத்தி மனு அளிப்பதற்கு தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்திருந்த ராமலட்சுமி, அங்கு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா்.
அப்போது, ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலா்கள் அவரை தடுத்து நிறுத்தி, தேனி மகளிா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.