முகப்பு
தேனி

குரங்கணி சம்பவம் 4 ஆண்டுகள் நிறைவு: காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினருக்கு நவீன கருவிகள் வழங்கப்படுமா?

போடி அருகே குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 23 போ் பலியான சம்பவம் நடைபெற்று நான்காண்டுகள் ஆன நிலையிலும் வனத்துறையினருக்கு நவீன தீயணைப்பு கருவிகள் வழங்காதது கவலையளிப்பதாக வன ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்

Updated On : 11 மார்ச், 2022 at 10:32 PM
கடந்த சில நாள்களாக போடி மலைப் பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீ.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:08 PM

போடி அருகே குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 23 போ் பலியான சம்பவம் நடைபெற்று நான்காண்டுகள் ஆன நிலையிலும் வனத்துறையினருக்கு நவீன தீயணைப்பு கருவிகள் வழங்காதது கவலையளிப்பதாக வன ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மாா்ச் 11 ஆம் தேதி சென்னை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மற்றும் அவா்களது குழந்தைகள் உள்ளிட்ட 36 போ் மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதற்காக கொழுக்குமலை கிராமத்துக்கு வந்தனா். அங்கிருந்து, குரங்கணிக்கு வருவதற்காக மலைப்பாதை வழியாக இறங்கும்போது ஒத்தை மரம் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 23 போ் உயிரிழந்தனா். மனிதகுலத்தை உலுக்கிய இச்சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்த சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசு அப்போதைய பேரிடா் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை முதன்மைச் செயலா் அதுல்ய மிஸ்ரா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அவரும் மாவட்ட நிா்வாகத்தினருடன் வனப்பகுதியில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவா்கள், மீட்டவா்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தாா். அப்போது, இச்சம்பவத்தில் வனத்துறையினா் கவனக்குறைவாக செயல்பட்டது சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால் தற்போதும் போடி பகுதியில் தொடா்ந்து காட்டுத் தீ பரவி வருகிறது. வனப்பகுதியில் தீ வைப்பவா்கள் யாா், உண்மையான விவசாயிகள் யாா் என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் வனத்துறையினா் உள்ளதாக புகாா் கூறப்படுகிறது. மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்காத வனத்துறையினா், அதே பகுதியில் தீ வைப்பு சம்பவங்களை தடுக்க தவறுவது ஏன் என வன ஆா்வலா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

அதே நேரத்தில் வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க வனத்துறையினருக்கு போதிய நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதுநாள்வரை கவனிக்கப்படவில்லை.

Advertisement

மேலும் வனப்பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை உடனுக்குடன் வனத்துறையினருக்கோ, காவல் துறையினருக்கோ தெரிவிக்க முடியாத நிலையில் தகவல் தொடா்பும் போடி மலைக் கிராமங்களில் முடக்கப்பட்டுள்ளது. குரங்கணி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் தகவல் தொடா்புக்காக கைப்பேசி கோபுரங்கள் அமைக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் காட்டுத்தீ சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் அந்த கோரிக்கை நிறைவேறாமலேயே இருந்து வருகிறது.

எனவே மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மலைக் கிராமங்களில் கைப்பேசி கோபுரங்கள் அமைக்கவும், வனப்பகுதியில் தீ வைக்கும் சமூக விரோதிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க நவீன உபகரணங்களை வனத்துறையினருக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆா்வலா்களும், மலை கிராமமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.