உத்தமபாளையமம்: ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை , ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை , ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.
இஸ்லாமியர்கள் மத்தியில் ரமலான் மாதம் முழுவதும் 30 நாள்கள் நோன்பு மேற்கொண்டு ரமலான் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு செவ்வாய்க்கிழமை உத்தமபாளையத்தில் இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடினர். வடக்கு தெரு, களிமேட்டுப்பட்டி, பாதர்கான்பாளையம், கோட்டைமேடு, இந்திரா காலனி, பி.டி.ஆர் காலனி என 13 பள்ளி வாசல்களில் அதிகாலையிலிருந்து பெருநாளை முன்னிட்டு தொழுகைகள் நடைபெற்றன.
கரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக ஊர்வலம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடைபெறவில்லை. இந்தாண்டு நோய் தொற்று விலக்கிக் கொள்ளப்பட்டதால், பெரியபள்ளி வாசலிருந்து , சுங்கச்சாவடி, கோட்டைமேடு, கிராமச்சாவடி, புறவழிச்சாலை சந்திப்பு, பி.டி.ஆர் காலனி வழியாக நீதிமன்றம் அருகே அமைக்கப்பட்ட ஈத்கா மைதானம் வரை இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர்.
Advertisement
Advertisement
அங்கு நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் , மக்கள் ஏற்ற தாழ்வுகளை கலைந்து அனைவரும் சமம் என்ற சமுதாய சிந்தனையுடன் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் நோய் நொடியின்றி நலமுடன் வாழவேண்டி தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் உத்தமபாளையத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ரமலான் வாழத்துக்களை தெரிவித்து ரமலான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த ரமலான் தொழுகையில் அனைத்து ஜமாத்தார்களின் தலைவர் தர்வேஷ் முகைதீன் உள்பட இஸ்லாமியர்களின் முக்கிய பிரபுகர்கள் என ஆயிரக் கணக்கானோர் இந்த தொழுகையில் கலந்து கொண்டு ரமலான் பெருநாளை சிறப்பித்தனர்.
உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சிலைமணி தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.