சுருளி அருவியில் 11 நாள்களுக்கு பிறகு குளிக்க அனுமதி!
கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் 11 நாள்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.
கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் 11 நாள்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.
கம்பம் பகுதியில் அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக மே 27 முதல் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், அரிக்கொம்பன் யானையை கடந்த ஜூன் 5-ஆம் தேதி சின்ன ஓவுலாபுரம் வனப்பகுதியில் அதிகாலை பிடித்த வனத்துறையினர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணை வனப்பகுதியில் விட்டனர். அன்றிலிருந்து 144 தடை உத்தரவு கம்பம் பகுதியில் விலக்கி கொள்ளப்பட்டது.
தற்போது அதன் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் பராமரிப்பு பணிகளை செய்த வனச்சரகத்தினர் புதன்கிழமை முதல் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்தனர். கோடை விடுமுறை காலம் முடியும் இன்னும் சில நாள்களே இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்து வருகின்றனர்.