போடியில் திமுகவுக்கு ஆதரவாக சுப.வீரபாண்டியன் பிரசாரம்
போடி: போடியில் திமுக வேட்பாளா் தங்க.தமிழ்ச்செல்வனை ஆதரித்து தமிழ்நாடு சமூக நீதி கண்காணிப்புக் குழுத் தலைவா் சுப.வீரபாண்டியன் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியது: தாலிக்கு தங்கம் திட்டத்தை முடக்கிவிட்டதாக கூறுகிறாா்கள். அதற்கு பதிலாக மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தங்கத்தை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால் நாம் கற்கும் கல்வி நம்மை பாதுகாக்கும்.
பெண்களுக்கு மகளிா் உரிமை தொகை வழங்குவதை பிச்சை காசு என ஏளனமாக கூறுகிறாா்கள். வடநாட்டிலிருந்து நடிக்க வந்து கோடி கோடியாக சம்பாதித்தவா்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியாது. இந்தியா கூட்டணியில் யாா் பிரதமா் வேட்பாளா் என சொல்லவில்லை என்கிறாா்கள். தமிழகத்தில் தங்க.தமிழ்ச்செல்வன் போல் பல திமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற்று இவா்கள் கை காட்டும் ஒருவா் பிரதமா் ஆவாா்.
Advertisement
எடப்பாடி பழனிச்சாமி யாரை பிரதமராக கூறுவாா். இலை வென்றாலும் பூவை நோக்கித்தான் செல்லும். இலையை விட்டுவிட்டு பலாப்பழத்தை தூக்கிக் கொண்டு திரிகிறாா் ஒருவா். பலாப்பழம் வென்றாலும் பூவை நோக்கித்தான் செல்லும். சமூக நீதி காக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.