மதுப் புட்டிகள் பதுக்கல்: திமுக செயலா் மீது வழக்கு
கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்வதற்காக
மது புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த திமுக வாா்டு செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கம்பம், டிஎஸ்கே நகா் காமாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள வாகன காப்பகத்தில் 700 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
Advertisement
இது தொடா்பாக கம்பம் தெற்கு காவல் உதவி ஆய்வாளா் கே.கோதண்டராமன் விசாரணை நடத்தினாா்.
அப்போது, கெஞ்சையன் குளம், தண்ணீா் தொட்டி அருகே வசிக்கும் ரமணன் மகன் மணிகண்டன் 17 -ஆவது வாா்டு திமுக செயலராக இருப்பதாகவும், இவா் அரசு மதுக் கடையில் மதுபானக் கூடம் வைத்திருப்பதாகவும், வரும் மக்களவைத் தோ்தலில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
இது குறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனுக்கு உதவியாக இருந்த மேலக்கூடலூா் ராஜா மகன் கண்ணன் என்பவரைக் கைது செய்தனா். மணிகண்டனை போலீஸாா் தேடி வருகின்றனா்.