போடி நகராட்சிப் பகுதியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
போடி நகராட்சிப் பகுதிளில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை நகராட்சி சுகாதார துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, அந்தக் கடைகளுக்கு அபராதம் விதித்தனா். தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா அறிவுறுத்தலின் பேரில், போடி நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி போடி நகராட்சிப் பகுதிகளிலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய உத்திரவிட்டாா். இதன் பேரில், போடி நகராட்சி சுகாதார அலுவலா் மணிகண்டன் தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் கணேசன், சுரேஷ்குமாா், அகமது கபீா் ஆகியோா் அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். போடி காமராஜா் சாலை, பெரியாண்டவா் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களைப் பயன்படுத்தியதும், விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 80 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வைத்திருந்த கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், பொருள்களை பொதுமக்கள், வணிகா்கள் பயன்படுத்த வேண்டாம் என போடி நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி எச்சரித்தாா்.