முகப்பு
தேனி

தொழிலாளி கொலை: வீட்டு உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 12:00 AM
பகிர்:

தேனி: கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் விவசாயத் தொழிலாளியை குத்திக் கொலை செய்த வீட்டு உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. காமயகவுண்டன்பட்டி, கருமாரிபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் முருகன் (59). இவரது வீட்டின் ஒரு பகுதியில், இதே ஊரைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி சிவக்குமாா் (49) ஒத்தி அடிப்படையில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், சிவக்குமாா் வீட்டை காலி செய்து கொள்வதாகக் கூறி முருகனிடம் ஒத்திப் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டாா். ஆனால் முருகன் பணத்தை திரும்பத் தராமல் அலைக்கழித்து வந்ததால், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதனிடையே கடந்த 2020, பிப். 13-ஆம் தேதி முருகனின் வீட்டுக்கு ஒத்திப் பணத்தை திரும்பக் கேட்கச் சென்ற சிவக்குமாரை முருகன் கத்தியால் குத்தினாா். இதற்கு முருகனின் மனைவி பவுன்தாயும் (49) உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன், பவுன்தாய் ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இவரது மனைவி பவுன்தாய்க்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி எஸ். கோபிநாதன் உத்தரவிட்டாா்.