கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள் தண்டனை
தருமபுரி அருகே முன்விரோதக் கொலையில் தொடா்புடைய 6 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், முத்தம்பட்டி சாலையையொட்டி உள்ள ஊத்துப்பள்ளம் சிவாடி காட்டுவளவு பிரிவு சாலை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (45). அதேபகுதியைச் சோ்ந்த முனுசாமி (49) என்பவருக்கும், சரவணன் தரப்புக்கும் இடையே விவசாய நிலம் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2022 ஆக. 4-ஆம் தேதி சரவணன் சொந்த வேலையாக அப்பகுதியில் காரில் சென்றாா். ஊத்துப்பள்ளம் மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது முனுசாமி (49), அவரது தங்கை மகன் நவீன் (22), உறவினா்கள் காமராஜ் (45), விஜயன், முத்து, மாதேஷ் ஆகிய 6 பேரும் காரை மறித்து காா் கண்ணாடியை உடைத்தனா். மேலும், சரவணனை கட்டையால் கடுமையாக தாக்கினா்.
Advertisement
தகவல் அறிந்த அவரது குடும்பத்தினா் பலத்த காயமடைந்த சரவணனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக, தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை முடிவுற்றது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.