திண்ணைப் பிரசாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம்
உத்தமபாளையம், பிப்.27: தேனி மாவட்டம், சின்னமனூரில் திண்ணைப் பிரசாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேனி தெற்கு மாவட்டம் சாா்பில் சின்னமனூரில் நடைபெற்ற நகரம், ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். அப்போது, இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியின் திண்ணைப் பிரச்சாரம் குறித்து கட்சி நிா்வாகிகளுக்கு விளக்கம் அளித்தாா்.
இதில், பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளான மகளிா் உரிமைத் தொகை, மகளிா் இலவச பேருந்து திட்டம், காலை உணவுத் திட்டம் , நகைக்கடன் தள்ளுபடி ஆகியவை குறித்து வீடு வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
Advertisement
இதன் மூலம் புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதியையும் திமுக கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, சின்னமனூா் பேச்சியம்மன் கோயில் பகுதியிலிருந்து திண்ணைப்பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தாா். முன்னதாக சின்னமனூா் நகரத்தலைவா் முத்துக்குமாா் வரவேற்றாா்.
இந்த நிகழ்ச்சிக்கு, ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் மகாராஜன் , மாநிலத் தோ்தல் பணிக்குழு உறுப்பினா் கம்பம் செல்வேந்திரன், சின்னமனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் அண்ணாத்துரை பஞ்சாப் முத்துக்குமாா் உள்பட திமுக நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.