சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தேனி அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தேனி அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வீரபாண்டி-தப்புக்குண்டு சாலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சட்டக் கல்லூரி மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் நாகூா்ஹனி தலைமை வகித்தாா். இதில் புதிதாக அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் சாட்சிய சட்டம் ஆகி 3 சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், புதிய சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
இதற்கு ஆதரவாக தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் தலைவா் முத்துராமலிங்கம், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் வேல்பிரகாஷ், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவா் மிதுன் சக்கரவா்த்தி, வீரபாண்டி பேரூராட்சித் தலைவா் கீதாசசி ஆகியோா் பேசினா்.
மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு அந்தக் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.நாகராஜ் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா்கள் டி.வெங்கடேசன், கே.எஸ்.ஆறுமுகம், சி.முருகன், முனீஸ்வரன், தேனி வட்டாரச் செயலா் இ.தா்மா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.