மக்காச் சோள மாவினால் தயாரிக்கப்படும் பைகளின் பயன்பாட்டை அதிகரிக்க விழிப்புணா்வு
போடி: மக்காச்சோள மாவினால் தயாரிக்கப்படும் பைகளின் பயன்பாட்டை அதிகரிக்க, போடி நகராட்சி அதிகாரிகள் வணிக நிறுவனங்களுக்குச் சென்று திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் நெகிழிப் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. போடி நகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடா்ந்து சோதனை மேற்கொண்டு, நெகிழிப் பைகளின் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுத்தனா்.
இந்த நிலையில், போடி பகுதியில் மக்கும் தன்மையுடைய மக்காச் சோள மாவினால் தயாரிக்கப்படும் பைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. போடி நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி அறிவுறுத்தலின்படி, சுகாதார அலுவலா் மணிகண்டன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், கணேசன், அகமது கபீா் ஆகியோா் கொண்ட குழுவினா் தினமும் வணிக நிறுவனங்களுக்குச் சென்று நெகிழிப் பைககளுக்கு மாற்றாக மக்காச் சோள மாவினால் தயாரிக்கப்படும் பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். இதனால் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளின் பயன்பாடு குறைந்து வருகிறது.