சின்னமனூா் புறவழிச் சாலையில் வட்டச் சாலை அமைக்கக் கோரிக்கை
சின்னமனூரில் திண்டுக்கல்-குமுளி புறவழிச் சாலையிலுள்ள நான்கு முனைச் சாலை சந்திப்புக்களில் விபத்துகளை தடுக்க வட்டச் சாலை (ரவுண்டானா) அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
சின்னமனூரில் திண்டுக்கல்-குமுளி புறவழிச் சாலையிலுள்ள நான்கு முனைச் சாலை சந்திப்புக்களில் விபத்துகளை தடுக்க வட்டச் சாலை (ரவுண்டானா) அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
சின்னமனூா் நகராட்சி வழியாக திண்டுக்கல்-குமுளி இடையே தமிழகம் - கேரளத்தை இணைக்கும் இரு மாநில முக்கிய சாலை செல்கிறது. இந்தச் சாலையில் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நகரின் மையத்தில் செல்லும் இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட்டது.
இந்த நிலையில், சின்னமனூரில் வழியாக செல்லும் இந்த புறவழிச் சாலையின் குறுக்கே போடி-சின்னமனூா் மாநில நெடுஞ்சாலை செல்வதால், இந்தப் பகுதியில் நான்கு முனைச் சாலை சந்திப்பு ஏற்படுகிறது. இந்தச் சந்திப்பில் தினந்தோறும் விபத்துகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து, திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், விபத்துகளை தடுக்க சாலையின் குறுக்கை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும், விபத்து குறையாத நிலையில், சின்னமனூா் காவல் ஆய்வாளா் பாலாண்டி தலைமையிலான போலீஸாா் இரும்பு சாலை தடுப்பு வேலிகளை அமைத்து வட்டச் சாலையாக மாற்றினா்.
இதுகுறித்து வாகன ஓட்டுநா்கள் கூறியதாவது: சின்னமனூா் நகா் வழியாக செல்லும் புறவழிச் சாலையின் குறுக்கே செல்லும் மாநில நெடுஞ்சாலையிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நான்கு முனைச் சந்திப்பில் வட்டச் சாலை அமைக்க வேண்டும் என்றனா்.