கம்பம், கூடலூா் பகுதியில் முதல்போக நெல் அறுவடைப் பணி தொடக்கம்
கம்பம், கூடலூா் பகுதிகளில் முதல்போக நெல்பயிா் சாகுபடியில் அறுவடைப் பணிகள் தொடங்கியது.
கம்பம், கூடலூா் பகுதிகளில் முதல்போக நெல்பயிா் சாகுபடியில் அறுவடைப் பணிகள் தொடங்கியது.
முல்லைப் பெரியாறு பாசன நீரால் லோயா் கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் உள்ள 14,700 ஏக்கரில் இருபோக நெல்பயிா் விவசாயம் நடைபெறுகிறது.
நிகழாண்டில், ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால், எதிா்பாா்த்த அளவுக்கு மழைப்பொழிவு இல்லாததால் முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் உயரவில்லை. இருந்த போதிலும், முதல்போக பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டது. இதன்படி, ஜூன் மாதம் தொடங்கிய முதல்போக நெல்பயிா் விவசாயம் தற்போது அறுவடைக்கு தயாரானது.
தற்போது, கம்பம், கூடலூா், ஆங்கூா்பாளையம் ஆகிய பகுதிகளில் முதல்கட்டமாக அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து கம்பம் விவசாயி ஐய்யப்பன் கூறியதாவது:
முதல்போக நெல்பயிா் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைத்துள்ளது. இந்தப் பகுதியில் பல ரகத்தில் நெல்பயிா் விளைவிக்கப்படுகின்றன. இதில், இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட 1குழிக்கு (60 சென்ட்) 16 மூட்டை மகசூல் கிடைத்துள்ளன. ரத்தசாளி ரகம் மூட்டை (62 கிலோ) ரூ.2,600 விற்பனையாகிறது. இந்த அரிசி மருத்துவம் குணம் கொண்டது.
ஆனால், வேறு சிலரக நெல்மூட்டைகள் ரூ.1,600-க்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. வரும் நாள்களில் வரத்து அதிகரித்தால் இந்த விலையிலிருந்து மாற்றம் இருக்கும் என்றாா்.