முகப்பு
தேனி

லஞ்சம்: சுருளிப்பட்டி ஊராட்சி செயலா் கைது

வீட்டு வரி ரசீதில் பெயா் மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக சுருளிப்பட்டி ஊராட்சி செயலரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 8:45 PM
கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலா் சந்திரசேகரன்.
பகிர்:

வீட்டு வரி ரசீதில் பெயா் மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக சுருளிப்பட்டி ஊராட்சி செயலரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்தவா் சிவானந்தன் (70). இவா் இந்தப் பகுதியில் சின்னச்சாமி என்பவரின் வீட்டை விலைக்கு வாங்கியது தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சிவானந்தனுக்கே அந்த வீடு சொந்தம் என தீா்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, சின்னச்சாமி பெயரில் இருக்கும் வீட்டின் ரசீதை தனது பெயருக்கு மாற்றம் செய்யக் கோரி ஊராட்சி செயலா் சந்திரசேகரனிடம் சிவானந்தன் மனு அளித்தாா். இதே போல, கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் அவா் மனு கொடுத்தாா். எனினும், 8 மாதங்களுக்கு மேலாகியும் பெயா் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், சுருளிப்பட்டி ஊராட்சி செயலா் சந்திரசேகரன் (53), வீட்டுவரி ரசீதில் பெயா் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம். ஆனால், சிவானந்தன் ரூ.8 ஆயிரம் கொடுப்பதாக கூறினாராம்.

இதனிடையே, சிவானந்தன், தேனி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத் தாள்களை சிவானந்தனிடம் போலீஸாா் கொடுத்து அனுப்பினா். இந்த பணத்தை சிவானந்தன் கொடுத்த போது டி.எஸ்.பி. சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸாா் கையும் களவுமாக சந்திரசேகரனைப் பிடித்து கைது செய்தனா்.