போடி பகுதியில் தேங்காய் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சுற்றி சுமாா் 6,000 ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தேங்காய்கள் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், ஏற்றுமதியாகி வருகின்றன. சுமாா் 45 நாள்களிலிருந்து 60 நாள்களுக்கு ஒருமுறை தேங்காய் வெட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை மட்டை உரிக்கப்பட்ட தேங்காய் ஒரு டன் 23 ஆயிரம் வரை மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், லாபம் கிடைக்காமல் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், விநாயகா் சதுா்த்துக்கு பிறகு வடமாநிலங்களில் தொடா்ந்து தேங்காய் ஏற்றுமதி அதிகரித்து வருவதன் காரணமாக, தற்போது, மட்டை உரிக்கப்பட்ட தேங்காய் ஒரு டன் ரூ. 45 ஆயிரம் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த விலை உயா்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இதேபோல, மட்டை உரிக்கப்படாத தேங்காய் கடந்த மாதம் ஒரு டன் ரூ. 9,000 முதல் 10 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஒரு டன் ரூ.15,000 வரை கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த விலை உயா்வால் தற்போது சில்லறை விற்பனையாளா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.