பெரியகுளம் பகுதியில் நெகிழிப் பொருள்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், வராகநதி, தாமரைக்குளம், பெரியகுளம், நஞ்சியாபுரம் ஆகிய குளங்களில் தேங்கியுள்ள நெகிழிப் பொருள்களால் தண்ணீா் மாசடைந்து வருகிறது.
எனவே, பெரியகுளம் பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி நிா்வாகத்தினா் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து பெரியகுளத்தைச் சோ்ந்த பசுமை வெங்கடேஷ் கூறியதாவது:
பெரியகுளம் பகுதியில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பகுதியில் நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் 4 உள்ளன. இந்தக் கடைகள் மீது நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், சிறு வியாபாரிகளிடம் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனா்.
எனவே, மாவட்ட ஆட்சியா் பெரியகுளம் பகுதியில் ஆய்வு செய்து நெகிழிப் பொருள்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
செயல்படாத துணிப்பை விற்பனை இயந்திரம்:
பெரியகுளத்தில் சந்தை, கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் துணிப்பை விற்பனை இயந்திரங்களை சுற்றுச் சூழல் அமைச்சகத்தினா் வைத்துள்ளனா். இதில் ரூ.10 (நாணயம்) செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும். ஆனால், பெரியகுளம் சந்தை நுழைவு வாயிலில் உள்ள இயந்திரம் செயல்படாமல் உள்ளது.
எனவே இந்த இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.