முகப்பு
தேனி

மதுரை மத்திய சிறையில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

Updated On : 4 ஜனவரி, 2025 at 1:40 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:34 PM

மதுரை மத்திய சிறையில் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டு, முறைகேடுகள் தொடா்பான ஆவணங்களைக் கைப்பற்றினா்.

தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் கைதிகளால் தயாரிக்கப்படும் எழுது பொருள்கள் உள்ளிட்டவை அரசுத் துறைகளுக்கு வழங்கப்படுகின்றன. இதன்மூலம், கிடைக்கும் வருவாயிலிருந்து கைதிகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை மத்திய சிறை உள்பட பல்வேறு சிறைகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை கைதிகளால் தயாரிக்கப்பட்ட எழுது பொருள்கள், மருத்துவ உதவிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியது போல போலியாக ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

இதையடுத்து, இதுகுறித்து மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளராக இருந்த ஊா்மிளா, சிறை அலுவலா் வசந்த கண்ணன், ஒப்பந்ததாரா்கள் உள்பட 11 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், இந்த முறைகேடுகள் தொடா்பாக ஊழல் தடுப்புப் பிரிவினா் மதுரை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையில், ஆய்வாளா்கள் குமரகுரு, சூா்ய கலா, ரமேஷ்பிரபு, பாரதி பிரியா உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் இரு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு, பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினா்.

உத்தமபாளையத்தில்...

இந்த முறைகேடுகள் தொடா்பாக தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள் உள்பட 11 இடங்களில் ஒரே நாளில் சோதனை நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மத்திய சிறையில் அலுவலராகப் பணியாற்றியவரும், தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளராகவும் பொறுப்பு வகிக்கும் வசந்த கண்ணன் வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக தேனி மாவட்டம், போடியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனா்.

அப்போது, அவரது வீடு பூட்டியிருந்ததால், தேனி மாவட்டம், லோயா்கேம்பிலுள்ள அவரது மாமனாா் வீட்டில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ராமேஸ்வரி உள்பட 5 போ் கொண்ட குழுவினா் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனா்.