கம்பத்தில் முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்ட கட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்த பாசனக் கால்வாய்களை தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்செல்வன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கம்பம் பகுதியில் கடந்த மாதம் 17-ஆம் தேதி பெய்த பலத்த மழையால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்றபட்டது. இதனால், கம்பத்தில் 18 கால்வாய், சின்னவாய்க்கால், குள்ளகவுண்டன்பட்டியில் சிறுபுனல் நீா் மின்நிலையம் ஆகியவை சேதமடைந்தன.
இந்த நிலையில், சின்னவாய்க்காலில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பாசனத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இந்தப் பகுதியில் 2-ஆம் போக நெல்பயிா் விவசாயம் செய்ய முடியாத என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்செல்வன், புதன்கிழமை சின்னவாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, வெள்ளத்தால் ஏற்பட்ட கால்வாய் உடைப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.