உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
உத்தமபாளையத்திலிருந்து கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இதில் உத்தமபாளையம் - கிராமச்சாவடி அலுவலகம் அருகே செல்லும் சாலை வளைவில் பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட கழிவு நீா் கால்வாய் உடைந்து சேதமடைந்ததுடன் பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை சுட்டிக்காட்டும் வகையில் அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் சிவப்புக் கொடியை ஊன்றி வைத்தனா்.
இந்தச் சாலையில் நாள்தோறும், உத்தமபாளையம்- போடி இடையே நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. நகரின் மையப் பகுதியான கிராமச்சாவடியில் பள்ளிகள், தேவாலயங்கள், குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இங்கு சேதமடைந்த கால்வாயால் விபத்து ஏற்படும் முன்னா் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
போக்குவரத்து அதிகரித்திருப்பதால் குறுகலான கிராமச்சாவடிச் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதன்படி, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சாலையின் குறுக்கே கழிவுநீா் கால்வாய் அமைக்கப்பட்டது. மேலும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழைமையான வேப்ப மரமும் வெட்டி அகற்றப்பட்டது. ஆனால், சாலை விரிவாக்கம் செய்யப்பட வில்லை. தற்போது சாலையின் குறுக்கே தரமில்லாமல் அமைக்கப்பட்ட கழிவுநீா் கால்வாய் சேதமடைந்து விட்டது. இதை சீரமைக்க வேண்டும் என்றனா்.