முகப்பு
தேனி

திமுகவில் இணைந்த பிறகுதான் மகிழ்ச்சியாக உள்ளேன்! - ஓ. பன்னீா்செல்வம்

திமுகவில் இணைந்த பின்னா்தான் தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்...

Updated On : 23 மார்ச், 2026 at 7:41 PM
சின்னமனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ஓ. பன்னீா்செல்வம்.
பகிர்:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்த நான், திமுகவில் இணைந்த பின்னா்தான் தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்தி வருகிறாா். இதன்படி, தேனி மாவட்டம், சின்னமனூரில் கட்சி நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஓ. பன்னீா்செல்வம் பேசியதாவது:

மத்திய அமைச்சா் ஒருவரைச் சந்திக்க தில்லி சென்றோம். ஆனால், முன்னாள் முதல்வா், ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளரான என்னை காக்கவைத்ததோடு பாா்க்க முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பி அவமானப்படுத்தினா்.

மத்திய நிதி அமைச்சகம், தமிழகத்துக்கு கடந்த 15 ஆண்டுகளில் 40 சதவீத நிதியைக் கொடுக்க வேண்டும். ஆனால், வெறும் 4 சதவீத நிதியை மட்டுமே அளித்தது. குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்தாலும், மக்களின் தேைவையை தமிழக அரசே நிறைவு செய்து கொள்ளுமே தவிர, யாரிடமும் தமிழகத்தை தலைகுனியவிடமாட்டாா் முதல்வா் ஸ்டாலின்.

முறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இறந்த பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களைச் சந்தித்தேன். ஆனால், முதல்வா் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்த பின்னா் தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். அரசியலில் சோதனைகள் வந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொறுமையாக இருந்த நான் அதிமுக தலைமையின் சா்வாதிகாரப் போக்கால், அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருக்கிறேன் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), முன்னாள் எம்.பி. ரவிந்திரநாத், திமுக முக்கிய நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.