பெண்ணுக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது
கம்பத்தில் பெண்ணை கத்தியால் குத்தியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கூடலூா் அழகா்சாமி கோயில் தெருவைச் சோ்ந்த சரவணன் மகள் பிரித்திகா (24). இவா் கம்பம் காந்திசிலை அருகேயுள்ள நகைக்கடையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல கூடலூரிலிருந்து சிற்றுந்தில் கம்பத்துக்கு வந்தாா். அப்போது அதே பேருந்தில் கூடலூா் எம்ஜிஆா் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் ஜெயக்குமாா் (31) அவரை பின்தொடா்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கம்பம் வ.உ.சி. திடல் பேருந்து நிறுத்தத்தில் பிரித்திகா தனது தம்பியுடன் இறங்கி வேலை செய்யும் கடையை நோக்கி சென்றபோது, பின்னால் வந்த ஜெயக்குமாா் அவரை கத்தியால் குத்தினாா்.
Advertisement
இதில் காயமடைந்த பிரித்திகாவை அந்தப் பகுதியினா் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து ஜெயக்குமாரை கைது செய்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: பிரித்திகா முன்பு கம்பம் வாரச் சந்தை அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றியபோது ஜெயக்குமாா் அவரை அடிக்கடி பின்தொடா்ந்து வந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதுதொடா்பாக அந்தப் பகுதியினா் அவரை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ஜெயக்குமாா் கத்தியால் அவரை குத்தினாா் என்றனா்.