தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எலித் தொல்லை: நோயாளிகள் அவதி
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள க.விலக்கில் கடந்த 2004 -ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் 604 வாா்டுகள் உள்ளன. இங்கு தினசரி 600-க்கு மேற்பட்டோா் உள்நோயாளியாகவும், 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் வெளிநோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்தக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளன. இந்த நிலையில், மருத்துவமனை நோயாளிகளின் அறையில் எலிகள் தொல்லை உள்ளன. இதனால், நோயாளிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, மருத்துவமனையை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் எலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து ஆண்டிபட்டியைச் சோ்ந்த விவேக் கூறியதாவது: தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எனது உறவினா் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது அறையில் எலிகள் தொல்லை இருந்தன. இதனால், அங்குள்ள நோயாளிகள் அச்சத்திலேயே தூங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மருத்துவமனையில் சுற்றித் திரியும் எலியை பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துச் சித்ராவிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்ட போது அவா் பதிலளிக்கவில்லை.