இடுக்கி அணையை பாா்வையிட 4 நாள்கள் அனுமதி
கோடை விடுமுறையை முன்னிட்டு, இடுக்கி அணையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட வருகிற வியாழக்கிழமை (மே 28) முதல் 31-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு கேரளம் மாநில அரசு அனுமதி அளித்தது.
கோடை விடுமுறையை முன்னிட்டு, இடுக்கி அணையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட வருகிற வியாழக்கிழமை (மே 28) முதல் 31-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு கேரளம் மாநில அரசு அனுமதி அளித்தது.
கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், சிறுதோணி என்ற இடத்தில் இடுக்கி அணை அமைந்துள்ளது. இந்த அணை 839 அடி உயரமுள்ள குறவன் மலையையும், 925 அடி உயரமுள்ள குறத்தி மலையையும் இணைத்து, 555 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
கேரளம் மின் வாரியக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாத் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க கேரள ஹைட்ரல் டூரிசம் மைய இயக்குநா் கேரள அரசுக்குக் கோரிக்கை விடுத்தாா்.
Advertisement
Advertisement
இடுக்கி மாவட்ட ஆட்சியா் அலுவலகமும் இதற்கு பரிந்துரை செய்தது. தற்போது, கேரளம் மாநில அரசு இதற்கு அனுமதி வழங்கியது.
தற்போது, அணையில் பராமரிப்புப் பணிகளும், பருவமழை தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டிய அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
எனவே, இந்தப் பணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று மட்டுமே அணையைப் பாா்வையிட வேண்டும். அணைப் பகுதியில் இயக்கப்படும் பேட்டரி காா் சேவை தவிா்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை ஹைட்ரல் டூரிசம் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன், கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி வரை அணையைப் பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது, கோடை விடுமுறையின் இறுதிக் கட்டமாக 4 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தமிழகம்-கேரளம் எல்லையோர மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.