காரியாபட்டி அருகே மணல் அள்ள எதிர்ப்பு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே இசலிமடையில் மணல் அள்ளுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. கிராம மக்கள் தொடர்ந்து மணல் அள்ள
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே இசலிமடையில் மணல் அள்ளுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. கிராம மக்கள் தொடர்ந்து மணல் அள்ள அனுமதிக்கக்கூடாது என்று கூறி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
காரியாபட்டி அருகே உள்ள இசலிமடை கிராமத்தில் கண்மாய்க்கான நீர்வரத்து ஓடையில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட சர்வே எண்களின் நிலத்தில் மட்டும் மணல் அள்ள அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர் பிற இடங்களிலும் அனுமதிக்கப்பட்ட ஆழத்தைவிட அதிக ஆழம் தோண்டி மணல் அள்ளியதாக கிராம மக்கள் புகார் கூறினர்.
Advertisement
இதைத் தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஒப்பந்ததாரர் மணல் அள்ள வந்த போது, கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு மணல் அள்ளும் பணியினை நிறுத்தினர். ஆனாலும் மணல் அள்ளும் இயந்திரங்கள் அந்த பகுதிகளிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.
ஒப்பந்ததாரர் மணல் அள்ள வருவதாக தகவல் கிடைத்ததன் பேரில், கிராம மக்கள் மணல் அள்ள அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் குணசேகரனிடம் முறையிட்டனர்.
தொடர்ந்து மணல் அள்ள அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய கிராம மக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளை உடனடியாக தலையிட்டு இசலிமடை கண்மாய் ஓடையில் மணல் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.