அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி
அதிமுக தற்போது அமித்ஷா முகமாக மாறிவிட்டது என்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியது குறித்து...
அதிமுக தற்போது அமித்ஷா முகமாக மாறிவிட்டது என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்தார்.
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சுப்பிரமணியனை ஆதரித்து கனிமொழி கங்கைகொண்டான் பகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
Advertisement
முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் ரூ. 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஆட்சி அமைந்த ஒரு மாதத்திற்குள் இல்லத்தரசிகளுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ள ரூ.8000-க்கான கூப்பன் வழங்கப்படும். மேலும் நாங்கள் பொருள்களை வழங்கவில்லை உங்களுக்கு என்ன தேவையோ அதை நீங்களே உங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள உரிமை வழங்குகிறோம்.
கலைஞர் காட்டிய வழியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டவர், தற்போது 20 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார்கள் கட்டணம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி இதுபோன்ற ஒரு திட்டம் வைத்திருப்பார். வைத்திருப்பார் அது மக்களை காப்பாற்றும் திட்டமாக இருக்காது, தன்னை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் திட்டமாக இருக்கும் என்றார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்துதான் பதவி வாங்கினார். ஆனால் இன்று அதே சசிகலாவுக்கு அதிமுக அலுவலகத்தில் இடமில்லாமல் செய்துவிட்டார். கூடவே இருந்த ஓபிஎஸ்ஸை வெளியேற்றி விட்டார். இன்று சசிகலாவை வருத்தப்படும் அளவுக்கு அவர் நடந்து கொள்கிறார். ஜெயலலிதாவால் நம்பப்பட்ட ஓபிஎஸ் அவர்களே இன்று தமிழகத்தை காப்பாற்ற ஸ்டாலின் மட்டும்தான் முடியும் என்று திமுகவுடன் இணைந்து செயல்படுகிறார். தன்னை காப்பாற்றியவர்கள், தன்னோடு இருந்தவர்கள் அத்தனை பேருக்கு துரோகம் செய்யக்கூடிவர் தான் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக இப்போது அமித்ஷா முகமாக மாறிவிட்டது. மத்திய அரசின் திட்டங்களை குறித்து பேசிய கனிமொழி, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 61% நிதியை மாநில அரசு வழங்குகிறது .ஆனால் ஸ்டிக்கர் மட்டும் மோடி உடையது. இந்தியில் திட்டங்களுக்கு பெயர் வைப்பதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு அது என்ன திட்டம் என புரியாமல் செய்கிறார்கள். உதாரணமாக பிரதான மந்திரி கிராம் சதக் யோஜனா என்றால் என்னவென்று புரிய இந்தி படிக்க வேண்டும் என்கிற நிலையை உருவாக்குகிறார்கள்.
தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 3600 கோடி கல்வி நீதியை இந்தி படிக்கவில்லை என்பதற்காக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது என்று குற்றம் சாட்டினார். ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளாக வரக்கூடாது என்றும் நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையை திணிப்பவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் நமது வேட்பாளர் சுப்பிரமணியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வெற்றியை தேடி தர வேண்டும் என்று அவர் கூறினார்.