திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது: எம்.பி கனிமொழி கண்டனம்
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளது தொடர்பாக...
முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுக மக்களவை உறுப்பினரும் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை (ஜூலை 18) இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்று பேசிய விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், முதல்வர் விஜய் பேரவையை பூட்டினாலும் எலும்பை உடைப்போம் என மிரட்டும் வகையில் பேசியது சர்ச்சையானது.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் தவெகவினர் புகார் அளித்தனர்.
இதையடுத்து விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜானகி மற்றும் போலீசார் திங்கள்கிழமை காலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வீட்டுக்கு வந்தனர்.
அப்போது நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த எம்எல்ஏவிடம் தங்களை கைது செய்ய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்று தயாராகி வெளியே வந்தார். அதற்குள் தகவல் அறிந்து எம்எல்ஏ வீட்டு முன்பு திரண்ட திமுகவினர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டவாறு போலீஸ் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, அவர்களை தடுத்து நிறுத்தி அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தில் பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர்.
ஆவர் மீது பிஎன்எஸ் சட்ட பிரிவுகள் 351 (3), 352, 353 (2) ஆகிய மூன்று பிரிவுகளில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கனிமொழி கண்டனம்
இந்த நிலையில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் கண்டன பதிவில்,
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.
உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
DMK MLA Markandeyan arrested: MP Kanimozhi condemns the move
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.