பருவமழை பொய்த்ததால் வெள்ளரி விலை இருமடங்கு உயர்வு
பருவமழை பொய்த்ததன் காரணமாக காரியாபட்டியில் வெள்ளரிப் பிஞ்சு விலை இருமடங்கு உயர்ந்து விட்டது.
பருவமழை பொய்த்ததன் காரணமாக காரியாபட்டியில் வெள்ளரிப் பிஞ்சு விலை இருமடங்கு உயர்ந்து விட்டது.
காரியாபட்டி பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக பருவமழை பொய்த்ததன் காரணமாக கண்மாய்கள், ஊரணிகள், கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கிராம மக்களின் பெரும் வாழ்வாதாரமான வெள்ளரி விளைச்சல் இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காரியாபட்டி பகுதியில் குராயூர், சென்னம்பட்டி, மருதங்குடி, ஓடைப்பட்டி உள்பட 20 கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் வெள்ளரி விளைச்சல் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 400 ஏக்கர் வெள்ளரி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஆண்டு முழுவதும் வெள்ளரி விளைச்சல் நடைபெறும் காரியாபட்டியில் இந்த ஆண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. வெள்ளரிப் பிஞ்சு விளைச்சால் பாதிப்பால் அதன் விலை இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. தரத்திற்கேற்ப 4 முதல் 6 எண்ணிக்கை கொண்ட வெள்ளரிப் பிஞ்சு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுபற்றி வியாபாரி ராஜேந்திரன் கூறுகையில், பருவமழை பொய்த்து விட்டதால் வெள்ளரிப் பிஞ்சு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே 10 எண்ணிக்கை கொண்ட வெள்ளரிப் பிஞ்சுகளை 10 ரூபாய்க்கு விற்பனை செய்தோம்.
பருவமழை பொய்த்தது, உரம் விலை உயர்வு, கூலி ஆட்கள் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் தற்போது 6 எண்ணிக்கை கொண்ட வெள்ளரிப் பிஞ்சுகளை 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம் என்றார்.