பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
மனித உணர்வுகளை மட்டுமன்றி இயற்கையையும், அடர்ந்த வனத்தையும் எப்படி ரசிக்க வேண்டும் என்று நூல் கற்றுத் தருகிறது.
பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு-அருண் ஜோஷி- தமிழில்: ஜி. குப்புசாமி; பக். 230; ரூ.250; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி-642 003, ✆ 99761 44451.
அதிகம் பேசப்படாத எழுத்தாளரால் அதிகமாக பேசப்படும் நாவலாக எழுதப்பட்டது பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு. ஆங்கில நாவலாசிரியர் அருண் ஜோஷி ஆழமான வாசிப்பாளர்களை மட்டுமே கொண்டவர் என்பதால், அவரது எழுத்துகள் அனைத்து தரப்பினரையும் சென்றடையவில்லை.
நவீன வாழ்வின் போலித்தனம், நெருக்கடியைப் பேசும் மனோதத்துவ நாவல் இது. பழங்குடியினரின் இயற்கையான வாழ்வியலைத் தேடிச் செல்லும் பில்லி பிஸ்வாஸின் பயணத்தை ஆழமாக விவரிக்கிறது.
Advertisement
அமெரிக்காவில் படித்து, மேல்தட்டு வாழ்க்கையை வாழ்ந்த பில்லி, தன் வாழ்க்கையின் அர்த்தமின்மையை உணர்ந்து, இந்திய பழங்குடி மக்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு, இறுதியில் காணாமல் போகிறான்.
மனித உணர்வுகளை மட்டுமன்றி இயற்கையையும், அடர்ந்த வனத்தையும் எப்படி ரசிக்க வேண்டும் என்று நூல் கற்றுத் தருகிறது. ஒரு நண்பனின் பார்வையில் நாவல் சொல்லப்படுவதால், நாயகன் பில்லியின் விநோதமான குணாதிசயங்களும், தேடலும் வித்தியாசமான அனுபவத்தைப் படிக்கிறவர்களுக்கு தருகிறது.
எழுத்தாளர்கள் சந்திப்பிலோ, இலக்கிய நிகழ்ச்சிகளிலோ, புத்தக வெளியீட்டு விழாக்களிலோ கலந்து கொள்ள ஆர்வம் காட்டாத அருண் ஜோஷியின் நூல்களுக்கு முக்கியத்துவம் கிடைக்காததில் வியப்பில்லை. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலை ஜி.குப்புசாமி நுட்பமாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில நாவலில் நுட்பமாக மறைந்திருக்கும் ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அதிக சிரத்தையுடன் மொழிபெயர்த்துள்ளார் என்றால் மிகையல்ல.