முதல்வர் பிறந்த நாள் விழா: 6600 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்குகிறார்கள்
விருதுநகர் மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வருகிற 24-ம் தேதி 6600 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும்
விருதுநகர் மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வருகிற 24-ம் தேதி 6600 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வழங்க இருப்பதாக ஒன்றியக்குழு தலைவர் மற்றும் தொகுதி கழக செயலாருமான கி.கலாநிதி தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 6600 பேருக்கு நலத்திட்ட உதவிகள், விழியிழந்தோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு மற்றும் கிளைச் செயலாளர்களுக்கு வேஷ்டி, பனியன்கள் மற்றும் சேலைகள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. அதோடு, வருகிற 24-ம் தேதி காலையில் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் வளாகத்தில் முதல்வர் நீடூழி வாழ சிறப்பு பிரார்த்தனை மற்றும் வாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் கட்சியின் நிர்வாகிகள் சார்பில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பின்னர் 6600 பேருக்கு அன்னதானம், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அளிக்கப்படும். அதேபோல், அன்றைய நாளில் பொதுக்கூட்டம் நடத்தி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. அதிமுகவின் சார்பில் சர்வமத பிரார்த்தனை, மக்கள் பயனடையும் வகையில் மருத்துவமுகாமும் நடத்தப்பட இருக்கிறது. இதில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
Advertisement
அதேபோல், விருதுநகர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1660 பேருக்கு தேர்வுக்கான அட்டைகளும் வழங்கப்பட இருப்பதாக ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி தெரிவித்தார்.