மர்ம காய்ச்சலால் ஒருவர் சாவு
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
மல்லாங்கிணர் அருகேயுள்ள திம்மன்பட்டியில் கடந்த 10 நாள்களாக மர்ம காய்ச்சல் நோய் தாக்கி சுமார் 80-க்கும் மேற்பட்டோர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
மல்லாங்கிணர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லையாம். இதுபற்றி திம்மன்பட்டி கவுன்சிலர் வீரலெக்கன் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு கொடுத்தார். ஆனாலும் சுகாதாரத் துறையினர் எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
Advertisement
இதனால் மர்ம காய்ச்சல் திம்மன்பட்டி கிராமத்தில் தீவிரமாக பரவி வருவதாகவும் கவுன்சிலர் வீரலெக்கன் கூறினார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம காய்ச்சல் நோய் தாக்கியதால் 10-க்கும் மேற்பட்டோர் மல்லாங்கிணர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நோய் தாக்கம் அதிகமாக உள்ளதாக திம்மன்பட்டியை சேர்ந்த சொக்கலிங்கம் (50) மல்லாங்கிணறு அரசு மருத்துவமனையில் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சொக்கலிங்கம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இனியும் அசம்பாவிதம் ஏற்படும் முன் மாவட்ட சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரியுள்ளனர்.