காரியாபட்டி பகுதியில் 60 ஏக்கரில் நெற்பயிர்கள் கருகின
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கண்மாய்கள் வறண்டதால் 60 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகின. இழப்பீடு தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கண்மாய்கள் வறண்டதால் 60 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகின. இழப்பீடு தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் ஓரளவு மழை பெய்ததால் கண்மாய்களில் நீர் பெருகியது. இதையடுத்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்தனர். காரியாபட்டி அருகே முடுக்கங்குளம் எசலிமலை பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்யாத நிலையில் அந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் வறண்டுவிட்டன. கிணற்றுப் பாசனம் என்பது அந்தப்பகுதியில் இல்லை. எனவே, விவசாயிகள் நெற்பயிர்களை காப்பாற்ற கண்மாய் பாசனத்தையே நம்பி இருந்த நிலையில், கண்மாய்கள் வறண்டு விட்டதால் நெற்பயிரை காப்பாற்ற முடியவில்லை.
நாற்று நட்ட பின்பு ரசாயன உரங்கள் இட்டதால் பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள போதிலும் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச முடியாததால் நெல்மணிகள் கருகி விட்டன. இதனால் 60 ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி மணி கூறியதாவது:
Advertisement
கடந்த ஐப்பசி மாதம் மழை பெய்ததால் கண்மாயில் நீர் பெருகிய உடன் தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் நெல் சாகுபடியை தொடங்கினோம். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவழித்துள்ளோம். ஆனால் தொடர்ந்து மழை பெய்யாத நிலையில், கண்மாய்கள் வறண்டு விட்டன. இதனால் பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள போதிலும் நெற்கதிர்கள் கருகி விட்டன. இதனால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் இப்போதும் பெரும் நஷ்டம் அடைந்துள்ளோம். எனவே அரசு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.