விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் சின்னராசா மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காரியாபட்டி, திருச்சுழி, மல்லாங்கிணர், மாந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. அரசு அனுமதி பெற்று இயங்கும் மணல் குவாரிகள் இருந்தாலும், திருட்டுத்தனமாக மணல் அள்ளும் குவாரிகள் 100-க்கும் மேல் இந்த இடங்களில் உள்ளன. இந்த திருட்டு மணல் குவாரிகள் 80 அடிக்கும் கீழே ஆழமாக தோண்டி அரசுக்கு சொந்தமான இடத்தில் மணலை எடுத்து லாரிகள் மூலமாக தங்கள் வீட்டின் முன் இருப்பு வைத்து குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருட்டு மணல் அள்ளி செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறையும் இணைந்து செயல்படவேண்டும்.
மணல் திருட்டு நடக்கும் இடங்களில் புதிய சோதனைச் சாவடிகள் அமைத்து மணல் ஏற்றி வரும் லாரிகளை சோதனை செய்து உரிய அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று விசாரணை நடத்த வேண்டும். இல்லையேல் திருட்டுத்தனமாக மணல் அள்ளிச் செல்வதை தடுக்க முடியாது. இவ்வாறு மணல் தொடர்ந்து அள்ளப்படுவதால் தோண்டிய பள்ளத்தின் அருகே உயர்மின் அழுத்த கம்பங்கள் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளன.
இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது. இந்த திருட்டு மணல் அள்ளப்படுவது குறைந்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். எனவே, மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.