சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
தினமும் 200-க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் வந்து செல்வதால் ரோடு சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளதால், பணிக்குறிப்பு கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
தினமும் 200-க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் வந்து செல்வதால் ரோடு சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளதால், பணிக்குறிப்பு கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி பி. புதுப்பட்டியில் அரசு மணல் குவாரி இயங்கி வந்தது. குண்டாற்றில் இருந்த மணல் முற்றிலும் அள்ளப்பட்டதையடுத்து, அங்கு இரண்டாம் நிலை விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. பணிக்குறிப்பு, கல்லாம் பிரம்பு, முருகையாபுரம் ஆற்றுப் பகுதியையொட்டி தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள மணல் காடுகளை குறைந்த விலைக்கு வாங்கி, அங்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணலை எடுத்து விற்பனை நிலையத்தில் குவிக்கின்றனர்.
10 நிமிடத்துக்கு ஒரு லாரி வந்து செல்வதால் ரோடு சேதமடைந்து, அப்பகுதி ஊர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்ல முடியவில்லை. தினமும் இருமுறை வந்து சென்ற அரசு பேருந்தும் வரவில்லை. அதன் ஓட்டுநர்கள் சாலையை காரணம் காட்டி வரத் தயங்குகிறார்கள்.
Advertisement
இந்த நிலையில் அங்கு அதிவேகமாக வந்த லாரிகளை தடுத்து, வியாழக்கிழமை பணிக்குறிப்பு கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணல் லாரிகளால் ரோடு குண்டும் குழியுமாகி உள்ளது.
சாலையை முறையாக சீரமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் முருகனிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அவர் கூறியதன் பேரில் பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.