100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்
கோவையில் திங்கள்கிழமை இந்திய துணை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்று வரு ஆய்வுக் கூட்டம் குறித்து...
கோவை: தமிழக தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், நூறு சதவீத வாக்குப் பதிவு உறுதி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரங்களுக்கிடையே கோவையில் திங்கள்கிழமை இந்திய துணை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
2026 தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தோ்தல் முன்னேற்பாடு பணிகளும், வாக்காளா்களுக்கு தோ்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் நோ்மையாக தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இந்திய தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இளையதலைமுறையினா் 100 சதவீதம் ஜனநாயக கடமையாற்ற முன் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவையில் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த மிக முக்கியமான மதிப்பாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை(ஏப் 13) நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் துணை ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த மதிப்பாய்வுக் கூட்டத்தில் கோவை மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இதில் பங்கேற்றுத் தங்களது பகுதிகளில் செய்யப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரங்கள் கோவை மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், வாக்குப் பதிவு நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள், வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தலைமைத் தேர்தல் துணை ஆணையர் மிகத் தீவிரமாகப் பரிசீலனை செய்து வருகிறார்.
தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைப்படி, அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படைகளின் செயல்பாடுகள் மற்றும் பணப்பட்டுவாடாவைத் தடுக்க எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சிகள் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விதிமீறல்கள் ஏதேனும் நடக்கிறதா? என்பதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்குக் கூடுதல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, கோவை மண்டலத்தில் தேர்தல் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் பத்து நாள்களே உள்ள நிலையில், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைப்பதற்கான இறுதி கட்ட விழிப்புணர்வுப் பணிகள் மற்றும் வாக்கு இயந்திரங்களைக் கையாளும் முறை குறித்த சோதனைகளை விரைந்து முடிக்கத் தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.