பலசரக்கு கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
காரியாபட்டியில் அடுத்தடுத்து பலசரக்குக் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 2 தங்க மோதிரங்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து
காரியாபட்டியில் அடுத்தடுத்து பலசரக்குக் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 2 தங்க மோதிரங்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் புயல்ராஜ்(45). இவர் மெயின் பஜாரில் பெரிய அளவிலான பலசரக்குக் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் வியாழக்கிழமை வியாபாரம் செய்து விட்டு வசூலான ரொக்கப் பணத்தை கல்லாப்பெட்டியில் வைத்து பூட்டி விட்டு அருகில் உள்ள வீட்டுக்கு சென்றாராம். அதையடுத்து, வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறப்பதற்காக வந்தாராம். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு திடுக்கிட்டார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.
உடனே காரியாபட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
Advertisement
அதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார், கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையிட்டனர். இது குறித்து புயல்ராஜ் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து கடையின் பூட்டை உடைத்து ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: இதே போல், காரியாபட்டி பாண்டியன் நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (48).
இவர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே பலசரக்குக் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் வியாழக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து விட்டு, அன்று வசூலான பணத்தை இரும்புப் பெட்டியில் வைத்து கடையை பூட்டி விட்டுச் சென்றாராம். பின்னர் வெள்ளிக்கிழமை காலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடை உடைக்கப்பட்டிருப்பதாக ராமலிங்கத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடைக்கு வந்த அவர் இரும்புக் கம்பியால் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது இரும்புப் பெட்டியை உடைத்து உள்ளேயிருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் 2 தங்க மோதிரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காரியாபட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.