திருச்சுழி மருத்துவமனையில் இரவுப் பணிக்கு மருத்துவர்கள் நியமிக்கக் கோரிக்கை
திருச்சுழி அரசு மருத்துவமனையில் இரவு பணிக்கு மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி அரசு மருத்துவமனையில் இரவு பணிக்கு மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி நகர்நலச் சங்க தலைவர் ராமராஜ் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்சுழியை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக திருச்சுழியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது 4 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மருத்துவமனையில் மொத்தம் 64 வார்டுகள் உள்ளன.
செவிலியர்கள் 7 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ரூ.50 லட்சம் மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் அறுவை சிகிச்சை அறைகளும், அறுவை சிகிச்சைக்கு முன்பு நோயாளிகள் தங்குவதற்காக நவீன வசதிகள் கொண்ட 12 படுக்கை அறைகளும் புதிதாக கட்டப்பட்டுள்ளன. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர்.
Advertisement
இந்நிலையில் இரவு பணியில் இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இருப்பதில்லை. மருத்துவர்கள் இல்லாததால் இரவு நேரத்தில் கிராமங்களில் இருந்து மகப்பேறு உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக இங்கு வரும் நோயாளிகள், வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். உடனடியாக இந்த மருத்துவமனையில் இரவு பணிக்கு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.