விருதுநகர் அரசு போக்குவரத்து கழகப் பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிலாளர்கள் வியாழக்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச பொதுச் செயலர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். சிஐடியூ பொதுச் செயலர் எம். வெள்ளத்துரை முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தற்போது போக்குவரத்துத் தொழிலாளர்கள் பெற்று வரும் ஊதியம் பிற அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதியத்தை விட மிகக் குறைவாக உள்ளது. அதனை ஈடு செய்து புதிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பணியில் உள்ளோர்களுக்கு பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும்.
மேலும், 2003-ஆம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணப் பலன்கள், ஓய்வூதியம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், ஏஐடியூசி பாண்டியன், தேமுதிக ஜோசப் கிளாடஸ், டிடிஎஸ்எப் ராமசாமி, பார்வர்டு பிளாக் பாலசுந்தரம், ஏஏஎல்எல்எப் ஜான் பிரிட்டோ, எம்எல்எப் பரசுராமன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.