விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையில் சனிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றி எரிந்து வருகிறது.
ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை வனச்சரகம் அய்யனார் கோயில், வாளைகுளம், ராஜாம்பாறை, அம்மன் கோயில், கோட்டைமலை, பிறாவடியார், நவலூத்து, தேவியாறு, சாஸ்தா கோயில் என 9 பீட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மாலை பிறாவடியார் பீட்டில் திடீரென காட்டுத் தீ பற்றியது.
ஒரு பகுதியில் பற்றிய காட்டுத் தீயானது, வனப் பகுதியில் வீசிய பலத்த காற்றால் மலையைச் சுற்றிலும் பரவியது. மலையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றி எரிவதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
இதனால், மலையில் உள்ள புல் வகைகள் மட்டுமின்றி, அரிய வகை மூலிகைச் செடிகளும், மரங்களும் எரிந்து கருகி வருகின்றன. மேலும், வன விலங்குகளும் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது.
இந்தத் தீயை கட்டுப்படுத்த, வனக் காப்பாளர்கள், தீத் தடுப்பு காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், பழங்குடியினர் என 20 பேர் கொண்ட குழுவினர், முதற்கட்டமாக தீ எரியும் பகுதிக்கு விரைந்துள்ளனர். இரவு நேரத்தில் காற்று பலமாக வீசி வருவதால், மேலும் தீ வேகமாகப் பரவும் நிலை உள்ளது. எனவே, தீயை விரைவில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வனத் துறையினர் தெரிவித்தனர்.