திருச்சியில் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடி போட்டிகளுக்கு, மாவட்ட வீரர்கள் தேர்வு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கபடி கழகம் சார்பில், திருச்சியை அடுத்த மணப்பாறையில், மாநில அளவில் ஆடவர்களுக்கான சூப்பர் சீனியர் கபடி போட்டிகள் ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளன. இப் போட்டிகளில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து கலந்துகொள்ளக் கூடிய வீரர்கள் தேர்வு ராஜபாளையத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டக் கபடி கழகத் தலைவர் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இத் தேர்வில், சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இவர்களை குழுக்களாகப் பிரித்து, மாதிரி போட்டிகள் நடத்தப்பட்டு, அதன்மூலம் சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு, மாவட்டக் கபடி கழகம் சார்பில் மேலும் பயிற்சி அளிக்கப்பட்டு, உணவு உடை போன்றவை வழங்கப்பட்டு, மாநில போட்டிக்கு விளையாட அனுப்பி வைக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் கலைசெல்வன், செயலர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாலகணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.