அருப்புக்கோட்டை அன்பு நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை
அருப்புக்கோட்டை அன்புநகரில் கழிவுநீர்க் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அன்புநகரில் கழிவுநீர்க் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை புதியபேருந்து நிலையம் அருகே உள்ள இப்பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். நகராட்சியின் 4ஆவது வார்டான நெசவாளர் காலனியோடு இணைந்துள்ள இந்த அன்பு நகரில் கழிவுநீர்க் கால்வாய் வசதி இதுவரை செய்துதரப்பட வில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்களின் வீட்டு முகப்பு வளாகத்துக்குள் ஆழமான குழிகளைத் தோண்டி அதில் வீட்டுப்புழக்க நீரை விடுகின்றனர்.
இதையடுத்து பல ஆண்டுகள் கோரிக்கைக்குப் பின்னர் இங்குள்ள முதல் தெருவில் மட்டும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது. பிற உள்தெருக்களில் இவ்வசதிகள் செய்து தரப்பட வில்லை. இதனால் இருளில் தவிக்கும் இப்பகுதி மக்கள் தங்கள் வீட்டின் முகப்பு விளக்கை பாதுகாப்பு கருதி இரவில் எப்போதும் எரியவிட வேண்டியுள்ளது. எனவே அன்புநகரில் கழிவுநீர்க் கால்வாய், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.