முகப்பு
விருதுநகர்

தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட ஊக்குநர்களின் முழு பங்களிப்பு அவசியம்: ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ஊக்குநர்களின் முழு பங்களிப்பு இருக்கவேண்டும் என, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் அறிவுறுத்தியுள்ளார். 

Updated On : 30 மார்ச், 2018 at 2:51 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ஊக்குநர்களின் முழு பங்களிப்பு இருக்கவேண்டும் என, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் அறிவுறுத்தியுள்ளார். 
       விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தூய்மைபாரத இயக்கம் சார்பில் ஊக்குநர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வியாழக்கிழமை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
     தூய்மை இந்தியா இயக்கம் என்பது வெறும் கழிப்பறை கட்டும் திட்டமாக மட்டுமல்லாமல், திறந்தவெளியில் மலம் கழிக்காமல் இருப்பதற்கு மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதே இதன் அடிப்படை நோக்கம். 
    எனவே, இங்கு புத்தாக்கப் பயிற்சிக்கு வந்துள்ள அனைத்து சுகாதார ஊக்குநர்களும் இத்திட்டத்தின் நோக்கத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, சுகாதாரமின்மையால் ஏற்படும் பாதிப்பு, அதனால் குழந்தைகள் வளர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படுகிறது, பெண்களுக்கு என்னென்ன ஆபத்துகள் நேரிடுகின்றன, தனிமனிதனின் வளர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படுகிறது, என்னென்ன நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன என்பது குறித்து மக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்து, அவர்களின் எண்ணங்களில் மாற்றம் கொண்டு வந்து தனிநபர் கழிப்பிடத்தையும், பொது சுகாதார வளாகத்தையும் பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
     தனிநபர் இல்லக் கழிப்பிடம் கட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.12,000 ஊக்கத் தொகையாக  வழங்குகிறது. தனிநபர் இல்லக் கழிப்பிடம் இல்லாத வீடுகளைக் கண்டறிந்து, அவர்களை பொது சுகாதார வளாகத்தைப் பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். 
     தனிநபர் இல்லக் கழிப்பிடம் கட்ட விரும்பும் பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலங்களிலோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ விண்ணப்பங்களைப் பெற்று, வேலை உத்தரவை பெற்றுக்கொண்டு, கழிப்பறை கட்டும் பணியை தொடங்க வேண்டும். விண்ணப்பங்கள் பெறுவதிலோ அல்லது வேலை உத்தரவு பெறுவதிலோ ஏதேனும் நிர்வாக நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின், மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம்.
      மேலும், பொது சுகாதார வளாகங்களை தவறாகப் பயன்படுத்துபவர்கள் குறித்து புகார் தெரிவித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து இல்லங்களிலும் தனிநபர் இல்லக் கழிப்பிடம் கட்டுவதற்கும், பயன்படுத்துவதற்கும் தேவையான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு ஊக்குநர்கள், தங்களின் முழு பங்களிப்பையும் அளிக்கவேண்டும் என்றார். 
     இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைச் செயற்பொறியாளர், உதவித் திட்ட அலுவலர்கள் உள்பட ஊக்குநர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.