ராஜபாளையத்தில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகளுக்கு தீ வைப்பு
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 3 இரு சக்கர வாகனங்களை, மர்ம நபர்கள் வியாழக்கிழமை அதிகாலை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 3 இரு சக்கர வாகனங்களை, மர்ம நபர்கள் வியாழக்கிழமை அதிகாலை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம் நகராட்சிக்குள்பட்ட 19 ஆவது வார்டை சேர்ந்த திரெளபதி அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சுந்தரி, தனியார் பள்ளி ஆசிரியர் இந்துமணி மற்றும் நூற்பாலைத் தொழிலாளி புஷ்பலதா (35) ஆகிய 3 பெண்களும் வழக்கம்போல் தங்களது வீட்டு வாசல்களில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த இவர்கள், தங்களது இரு சக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டனர்.
உடனே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனாலும், 3 வாகனங்களும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. வாகனங்களில் மண்ணெண்ணெய் ஊற்றி மர்ம நபர்கள் எரித்திருப்பது தெரியவந்தது.
சில மாதங்களுக்கு முன், இதே பகுதியில் இரு சக்கர வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், தற்போது நடந்துள்ள இந்த சம்பவத்தால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.