விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் நகராட்சி ஆய்வாளர் அறை பூட்டியே கிடப்பதால், சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து மகப்பேறுக்காக ஏராளமான பெண்கள் வருகின்றனர். இந்நிலையில், இங்கு தினந்தோறும் குறைந்தது 5 பெண்களுக்கு பிரசவம் நடைபெறுகிறது.
அதையடுத்து, இம்மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக, மருத்துவமனை வளாகத்தில் நகராட்சி ஆய்வாளருக்கென ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று குழந்தையின் உறவினர்கள் பிறப்பை பதிவு செய்து, சான்றிதழ் பெற்றுச் செல்லலாம். இதனால், பிறப்பு சான்றிதழை எந்தவித அலைச்சலுமின்றி பெற்று வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் இந்த அலுவலகம் பூட்டியே காணப்படுகிறது. இதனால், தாய்மார்கள் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், விருதுநகர் நகராட்சி அலுவலகத்துக்கு இச்சான்றிதழ் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அலுவலரை தேடி நாள்தோறும் அலைந்து வருகின்றனர்.
எனவே, அரசு தலைமை மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.