விருதுநகர் பஜார் வழியாக பேருந்துகள் இயக்குவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், பள்ளிக் குழந்தைகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளதால், மாற்று வழியில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் பஜார் பகுதி மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. இவ்வழியே பல ஆண்டுகளாகப் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக, விருதுநகருக்குள் வரும் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் கிருஷ் ணமாச்சாரி சாலை வழியாக பிற பகுதிகளுக்குச் சென்றுவந்தன. இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் பஜார் வழியாக பேருந்துகளை இயக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
எனவே, இவ்வழியே அருப்புக்கோட்டை, ராமேசுவரம், சாத்தூர் மற்றும் கிராம பகுதிகளுக்குச் செல்லும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரத் தொழில் துறை சங்கத்தினருடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், பேருந்துகளை பஜார் வழியாக இயக்கியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்து வந்தது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளித்தனர். ஆனாலும், பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. எனவே, பஜார் வழியாக பேருந்துகள் இயக்குவதை நிறுத்த வலியுறுத்தியும், கிருஷ்ணமாச்சாரி சாலை வழியாக மீண்டும் அனைத்து வாகனங்களையும் இயக்கவேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நெல்கடை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் முருகன் தலைமை வகித்தார்.
இதில், வியாபாரத் தொழில் துறை சங்கத்தின் தலைவர் வி.வி.எஸ். யோகன், முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் முகமது இப்ராஹிம், மார்க்சிஸ்ட் கட்சி நகர்குழு உறுப்பினர் தேனி வசந்தன், மாநிலக் குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் என ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.